Tuesday, September 6, 2016

அணுவின் இயக்கத்தை விளக்கும் நடராஜர்


விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்



உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!

பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.




இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!


விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.



கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.


எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.


பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.


இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!


அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."


அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:




"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."



நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.


விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)


இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)


செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!

இப்படிப்பட்ட பதிவுகளை இத் தளத்தில் ஏன் இடுகிறோம் என்றால் இனிமேல் ஆவது இந்து மத மகிமையை உணர்ந்து இந்து மதத்தை இழுக்காக்கும் ஆசாமிகள் பற்றி பதிவிடும் பதிவாளர்கள் இந்துவின் மகிமை பற்றி பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

என்றும் அன்புடன்
தர்மத்தின் பாதையில்


Monday, September 5, 2016

கிருஸ்ணர் வாழ்ந்த இடத்தை கண்டறிந்த தொல்பொருள் ஆய்வு



கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகையும் 5200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியது. தொல்லியல் ஆராய்ச்சியில், புதைந்த பகுதிகளைக் காண முடிந்ததால் துவாரகை இருந்தது உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சி: இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்தமண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன.

மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குரு÷க்ஷத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார். கண்ணனின் எட்டு துணைவியர் (அஷ்ட மகிஷிகள்), அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம்.

17முறை போக்: துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை உணவு படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும். கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.

இருப்பிடம்: குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 455 கி.மீ.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nQZFS9Hij0M